தூத்துக்குடியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் 201 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை
உணவு பாதுகாப்பு விதிகளை உணவு வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்,உணவு பாதுகாப்புத் துறை,நியமன அலுவலர்,மரு.ச.மாரியப்பன்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா, மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து,
உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் மற்றும் தூத்துக்குடி மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர், சக்தி முருகன் அடங்கிய குழுவினர் தூத்துக்குடியின் பூபால்ராயபுரத்தில் உள்ள ரிஷி டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, 201 கிலோ காலாவதியான, லேபிளிடாத மற்றும் போலி முகவரியிட்ட லேபிளுடன் கூடிய உணவுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
போலி முகவரியுடன் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்ய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதைப் போல், சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள உணவகத்தில் ஆய்வு செய்த பொழுது, தயாரிப்பு தேதி இல்லாத, 6 கிலோ உறைநிலையிலிருந்த சிக்கன் மற்றும் நண்டு பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது.
உணவு வணிகர்கள் எவரேனும், காலாவதியான, லேபிளில்லாத, தப்புக்குறியீடான உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது உணவகங்களில் பயன்படுத்தினாலோ, அவ்வுணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.
மேலும், நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொட்டலங்களில் காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும் என்றும், எந்தவொரு கடையாவது காலாவதி உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக அறிந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். தங்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.