குரும்பூர், தட்டார்மடம், எட்டையாபுரம், நாசரேத், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர், தட்டார்மடம், எட்டையாபுரம், நாசரேத், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று (18.03.2023) குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யோகரத்னா நகர் பகுதியில் பொதுமக்களிடமும், தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முகமது ரஷீக் தலைமையிலான போலீசார் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவக்குறிச்சி பகுதியில் இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடமும், எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளம்புவனம் பகுதியில் பெண்களிடமும், நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வைகுண்டதாஸ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. சமர்வேல் செல்வின்ராஜ், திரு. சிதம்பரமூர்த்தி மற்றும் போலீசார் ஆகியோர் நாசரேத் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்குபேரி பகுதியில் பொதுமக்களிடமும், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடசாமிபுரம் பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் SOS செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.