விமான நிலைய ஓடுபாதை 3115 ஓ 45 மீட்டராக அகலப்படுத்துவது தொடர்பாகவும், 10800 சதுரமீட்டர் அளவில் விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ;மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், பங்கேற்பு
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 23 ;தூத்துக்குடி விமான நிலையம் ஓடுபாதை விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி விமான நிலையம் ஓடுபாதை விரிவாக்கம் தொடர்பான மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (23.02.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சத்யராஜ் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு விமான நிலையம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக குமாரகிரி, சேர்வகாரன்பட்டி, முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம் பகுதியில் நிலம் எடுப்பு தொடர்பான விவரங்களும், விமான நிலைய ஓடுபாதை 1350 ஓ 30 மீட்டரில் இருந்து 3115 ஓ 45 மீட்டராக அகலப்படுத்துவது தொடர்பாகவும், 10800 சதுரமீட்டர் அளவில் உள்நாட்டு முனையம் 600 பயணிகள் கையாளும் திறனும் அமைக்கப்பட உள்ளது குறித்தும், வாகன நிறுத்துமிடம் மற்றும் முழுமையான சுற்றுச்சுவருடன் 6 கண்காணிப்பு கோபுரம் அமைப்பது குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளம் பெருகிய மாவட்டம் ஆகும். இங்குள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகளால் மேலும் பயண வசதி மற்றும் தொழில் வளம் பெருகும். விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக விமான நிலைய வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற்றுவதில் கவனம் செலுத்தப்படும். விமான நிலையத்திற்கு தேவையான நீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் கவனம் செலுத்தப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலை கண்காணிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளையும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விமான நிலைய வளாகத்திற்கு அருகில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளீர்கள். இதுகுறித்து விதிமுறைகள் தெரிவிக்கவும். விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலம் குறித்த சர்வே நம்பர் மற்றும் சப் டிவிசன் விவரங்களும் முழுமையாக தெரிவிக்கப்படும். வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் பலகையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியேற்ற விமான நிலைய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களின் கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை கருத்தில்கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் விமான நிலைய பணியாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், துடிசியா தலைவர் ஜெயபிரகாசம், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.