ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் ; சட்ட ஆணையம் இன்றும் நாளையும் கருத்து கேட்பு
புதுடெல்லி, 2018 ஜூலை 07 ;
ஒரே நாடு ஒரே தேர்தல் -திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்றும் நாளையும் கருத்துக்களை கேட்கிறது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.
அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் டெல்லி கான்மார்க்கெட்டில் உள்ள லோக்நாயக் பவனில், இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். அதிமுக சார்பில், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் பி.வேணுகோபால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை. இரு கட்சிகளின் சார்பில் பங்கேற்பவர்கள் யார்? என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், இருகட்சிகளும் புறக்கணிக்க உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.