வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது - ரூபாய் 1,65,000/- மதிப்புள்ள 5 ½ பவுன் தங்க செயின் மீட்பு - செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்
தூத்துக்குடி 2023 செப் 22 ;வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது - ரூபாய் 1,65,000/- மதிப்புள்ள 5 ½ பவுன் தங்க செயின் மீட்பு - செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரது மனைவி ஜெயசீலி என்ற 70 வயது மூதாட்டி கடந்த 05.08.2023 அன்று அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஜெயசீலியின் கழுத்தில் கிடந்த 5 ½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து மேற்படி ஜெயசீலி அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷ் நகரை சேர்ந்த ராமன் மகன் ராஜேஷ் (39) என்பவர் மேற்படி மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி ராஜேஷை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 1,65,000/- மதிப்புள்ள 5 ½ பவுன் தங்க செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.