பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனந்தக் கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்தார்.
சென்னை 2021 ஆகஸ்ட் 17 ; பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனந்தக் கண்ணன்(வயது 48) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.
90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொலைக்காட்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஆனந்தக் கண்ணன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஒப்பந்தமானார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்தக் கண்ணன் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.