ஆறுமுகநேரி கொலைமுயற்சி வழக்கில் சம்பந்தம்பட்ட நபர்கள் குண்டர்சட்டத்தில் சிறையிலடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 29.12.2022 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் அத்துமீறி நுழைந்து உணவு விடுதியின் உரிமையாளரான ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் (45) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில் ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியைச் சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் (எ) அந்தோணி பிரதீப் (20) மற்றும் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் (எ) பப்பை (19) மற்றும் சிலரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான பிரதீப் (எ) அந்தோணி பிரதீப் மற்றும் அலெக்ஸ் ரூபன் (எ) பப்பை ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் அவர்களும்,
கடந்த 25.12.2022 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (50) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (எ) மதுரைமுத்து (32) என்பவரை குரும்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி வழக்கின் எதிரியான முத்துக்குமார் (எ) மதுரைமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அவர்களும்,கடந்த 18.11.2022 அன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் வைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணிபுரியும் விளாத்திகுளம் பூசனூரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அய்யப்பசாமி (42) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி கடையிலிருந்த ரூபாய் 1,50,470/- பணம், 40 மதுபாட்டில்கள் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தூத்துக்குடி சிலுவைபட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் மகன் விக்ரம் (எ) விக்கி (22) மற்றும் சிலுவைப்பட்டி தாய் நகரைச் சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (எ) அசோக் (29) ஆகியோரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான விக்ரம் (எ) விக்கி மற்றும் ஆனந்த் (எ) அசோக் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியைச் சேர்ந்த சூசைராஜ் மகன் 1) பிரதீப் (எ) அந்தோணிபிரதீப் மற்றும் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திலகர் மகன் 2) அலெக்ஸ் ரூபன் (எ) பப்பை, குரும்பூர் அலகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் 3) முத்துக்குமார் (எ) மதுரைமுத்து, தூத்துக்குடி சிலுவைபட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் மகன் 4) விக்ரம் (எ) விக்கி மற்றும் சிலுவைப்பட்டி தாய் நகரைச் சேர்ந்த மாரிக்குமார் மகன் 5) ஆனந்த் (எ) அசோக் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 5 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.