பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் திரேஸ்புரம், பூவல்ராயபுரம் மீன் மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி 2020 மார்ச் 28 ; தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் திரேஸ்புரம், பூவல்ராயபுரம் மீன் மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் திரேஸ்புரம், பூவல்ராயபுரம் மீன் மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இன்று (28.03.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், உடன் இருந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரானோ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களது வீட்டிற்கே சென்றும் வழங்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஓட்டல்கள், பேக்கரிகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், பிரட் போன்றவை கிடைப்பதற்கு உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையெ சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோன்று சிறிய கிராமங்களிலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியுடன் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 150 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோன்று கோவில்பட்டி, காயல்பட்டிணம், திருச்செந்தூர் போன்ற பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டும், தனியார் மருத்துவமனைகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளில் முகமூடி, வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் மற்றும் மருந்துகள் தேவையான அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் இதுவரை கொரானொ வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கிறோம்.
நமது மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 1,500 பேர் வரை தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். அவர்களை கண்காணிக்க வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கைகளில் ஸ்டாம்பு மற்றும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நபர்களுக்கு ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் வீட்டிலேயே கிடைப்பதற்கு வசதியாக ஒவ்வொரு கோட்ட அளவிலும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரானோ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் வேளாண் வணிகம் சாந்திராணி, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், செயற்பொறியாளர் பார்த்திபன், மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.