தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
டெல்லி 2023 மார்ச் 26 ;தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடல்வழி போக்குவரத்திற்கு தூத்துக்குடி முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள துறைமுகத்தில் இருந்துதான் ஏராளமான வெளிநாடுகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டும், அங்கிருந்து வரும் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி துறைமுகத்திற்கான போக்குவரத்தை மேம்படுத்த அப்பகுதியில் ஆறு வழிச்சாலை அமைத்திட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் ஆறுவழிச்சாலை அமைத்திட ரூ. 200.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை 138-ல் 6.140 கி.மீ தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆறு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.